பித்ருக்களை எதற்காக வழிபட வேண்டும்? - aanmeegam tamil 8

பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களை குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள்.

நம்முடைய இந்த உடல், உயிர், பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. இதை அனுபவிக்கும் போது நமது பித்ருக்கள் செய்த பாவம், புண்ணிய பலனை சேர்த்தே அனுபவித்து வருகிறோம். பித்ருக்களை வழிபட்டால் அவர்கள் நமக்கு எப்போதும் நன்மையே செய்வார்கள். அவர்களை நாம் மனதால் நினைத்தால் கூட அவர்கள் மகிழ்வார்கள். அவர்கள் மகிழ்ந்தால் நம் துன்பங்கள் நீங்கும்.

பிதுர் கடன்
நமது பித்ருக்கள் (தாய், தந்தை, தாத்தா, பாட்டி) நம்முடன் வாழும் போது அவர்களை பேணி காத்து அவர்கள் பசியினை போக்க வேண்டும். அதேபோல் மறைந்த பின்பும் அவர்களின் பசியை போக்க வேண்டும். இதுவே பிதுர் கடன்  எனப்படும்.

பித்ரு லோகம் 
சூரியனுக்கு அப்பால், பல லட்சம் மைல்  தொலைவில் பித்ரு லோகம் இருப்பதாக கருட புராணம் கூறுகிறது. அங்கிருந்து இறந்து போன நம் முன்னோர்கள் தங்கள் குடும்பங்கள் நலமாகவும், வளமாகவும் வாழ அருளாசி வழங்க அமாவாசை அன்று  பூமிக்கு வருகிறார்கள். தங்கள் தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள். அவர்களது வாரிசுகளான நாம், துவங்கும் காரியங்களை கரிசனத்துடன் பார்க்கிறார்கள். ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.

நமது பித்ருகள்தான் கடவுளின் அருளை நமக்கு வெகு எளிதாக பெற்றுத்தரும் வல்லமை பெற்றவர்கள். நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றி தருபவர்கள் நமது பித்ருக்களே.

எனவே, பித்ருக்களை சிரத்தையோடு வழிபாடு செய்து அவர்களின் பசியினை போக்க வேண்டும். அவ்வாறு பசியினை போக்காமல் விட்டுவிட்டால் நமது பித்ருக்கள் பசியால் வாடுவர். வருத்தத்துடன் பித்ரு லோகம் செல்வர்.

வருத்தத்துடன் போகும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர். அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபம் அளிப்பர். இந்த சாபம் தெய்வ அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. கடவுளின் வரங்களையே தடை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் நமது பித்ருக்கள். எனவே அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது. மேலும் அவர்களின் பசியைப் போக்கி அவர்களை அமைதிபடுத்த வேண்டும்.

நமது வீடு தேடி வரும் பித்ருக்களுக்கு எள் கலந்த தண்ணீரை கொடுக்க வேண்டும். பித்ருக்கள் காக்கை வடிவத்தில் வந்து நாம் கொடுக்கும் உணவை சாப்பிடுவதாகச்  சாஸ்திரங்கள் சொல்கின்றன.

பித்ருக்களுக்கு செய்யும் பூஜை 
ஒருவர் இப்பிறவியில் அல்லது முற்பிறவிகளில் தன்னை பெற்ற தாய், தந்தையரை கவனிக்காமல் விட்டு விட்டால், அவர்களுக்கு உணவு அளிக்காமல் இருந்து விட்டால் அல்லது அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் விட்டு விட்டால், அவருக்கு பித்ரு தோஷம் ஏற்படுகிறது. ஒருவர் தனது தாய், தந்தையரை கண்ணீர் வடிக்க விட்டால் அவருக்கு பித்ரு தோஷம் ஏற்படுகிறது. 

பித்ரு தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது. இந்த தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை மற்றும் குழந்தை பாக்கியம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சனை இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் எதுவும் நடக்காது.  இவர்கள் எவ்வளவுதான் உழைத்தாலும் இவர்கள் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. இதற்கு என்ன தான் முடிவு? பித்ருக்களை சிரத்தையோடு வழிபாடு செய்தால் பித்ரு தோஷத்திலிருந்து விடுபடலாம்.

பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பலன் உண்டாகாது. பித்ரு  தோஷம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும். அதனை முதலில் போக்கிட வேண்டும். பின்னரே, வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் வரும்.

பித்ருக்களுக்கு செய்யும் பூஜை இறைவனைச் சேருகிறது.

“ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்று கொள்வதில்லை” என விஷ்ணு பகவான் கூறியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.

தர்ப்பணம் கொடுத்த பிறகு, அன்னதானம் செய்தல் சிறந்தது.

திலா ஹோமம்  
மிகக் கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் ராமேஸ்வரத்திற்கு சென்று திலா ஹோமம் செய்வது அவசியமானது. இதை வேதம் அறிந்த பண்டிதர்களால் தான் செய்ய வேண்டும்.

திலா ஹோமம் எனப்படுவது நெல்லும், எள்ளும் கலந்து செய்யும் ஹோமம் ஆகும்.

திலம் என்றால் எள். திலா ஹோமம் செய்யும் அன்று இரவு, இராமேஸ்வரத்தில்  தங்க வேண்டும். சிரத்தையுடன் செய்தால்தான் முழு பலனும் கிடைக்கும்.

திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது  கருட பகவான் அங்கு வட்டமிட வேண்டும். இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான் மகா விஷ்ணு ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.

குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே திலா ஹோமம் செய்ய வேண்டும்.

வைணவ சம்பிரதாயத்தை சேர்ந்தவர்கள் இராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக் கரையில் திலா ஹோமம் செய்து பித்ருக்கள் ஆசிர்வாதம் பெறலாம்.

அமாவாசை தினத்தில் செய்யக் கூடாதவை :
1. அமாவாசை அன்று பித்ருக்கள் வழிபாடு செய்பவர்கள்  வீட்டு  வாசலில் கோலம் போடக்கூடாது.
2. மாமிசம் சாப்பிடக் கூடாது.
3. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது.

செய்யக் கூடியவை 
1. தர்ப்பணத்தை கிழக்கு முகமாக பார்த்தப்படி கொடுக்க வேண்டும்.
2. பித்ருக்களின் பூஜையை முதலில் முடித்த பிறகு, சிறிது நேரம் கழித்து நாம் செய்யும் நித்திய பூஜையை செய்யலாம்.
3. பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வம் மகாவிஷ்ணு.

பித்ருக்கள் வழிபாடு 
அமாவாசை அன்று, பித்ருக்கள் வழிபாட்டின் போது, வீட்டில் முன்னே இறந்தவர்களின் படத்திற்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகாவிஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசீர்வாதம் கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்க்கள். அதன்மூலம், நமது துயர் நீங்கி, வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது. அதாவது ஒன்றையொன்று சந்தித்து கொள்கிறது. இந்நாளில் பித்ருக்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசையில் பித்ருக்களுக்கு வழிபாடு செய்வது அவர்களுக்கு உணவு அளிப்பது போன்றதாகும்.

நம்முடன் வாழ்ந்து, நம் இன்ப, துன்பங்களில் பங்கு கொண்ட,  இறந்து போன முன்னோர்களை நாம் நினைப்பது மிகவும் முக்கியம். நாம் அவர்களுக்கு செய்யும் வழிபாடும், தர்ப்பணமும் அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து, அவர்கள் நம்முடைய முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவர்.